Friday, January 1, 2016

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

TAMILSJKT
அன்புசால் ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்….

இன்னும் 3 தினங்களில் பள்ளி திறக்கப்பட்டு நம் சக்கர வாழ்க்கை தொடங்கிவிடும். தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு என்று நாமும் கூக்குரலிட்டோம். பெற்றோர்களும் அனுப்பி வைக்கின்றனர்.  சரி, இனி நாம்தான் அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். ஆசிரியர்களில் பலர், பள்ளிகளில் தங்களின் வேலைக்கும் அர்ப்பணிக்கும் ஏற்ற அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று வெறுப்படைந்து இருக்கலாம். நமக்கேற்ற கூலி என்றாவது ஒருநாள் கிடைத்தே தீரும். அதை யாரும் தடுக்க முடியாது. நம் கடமையைச் செய்வோம். நம்மை நம்பி வந்திருக்கும் நம் எதிர்காலச் சிற்பிகளுக்கு நல்லதொரு வழிதடத்தைக் காட்டுவது நம் கடமையாகும். நம் வெறுப்பு, விரக்தி, ஆத்திரம் அனைத்தையும் ஒருபக்கம் வைத்துவிட்டு, நம் கடமையை ஆற்றுவோம். மற்றவர் பிள்ளைகளைத் தம் பிள்ளைகள் போல் கருதி பணியாற்றினால் அதன் பலன் நம் பிள்ளைகளுக்குக் கண்டிப்பாய் சேரும் என்று உறுதியாக நம்புவோம்.

திறமையான, துடிப்பான ஆசிரியர்கள் பலர் பள்ளியில் ஓரங்கட்டப்படுவதையும், ஏமாற்றுபவர்கள், போலியானவர்கள் பெறும் மரியாதையைப் பெறுவதையும் கேட்டிருக்கிறேன். அந்தப் பாவத்தில் நாமும் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

சரி, சொல்ல வந்த விடயத்தை விட்டு விட்டேன். இங்குப் பதிவு செய்யப்படும் RPT, DSKP, MODUL போன்றவற்றை நான் ஒருவனே பார்த்து உறுதி செய்வது கடினமான ஒன்று. நானும் ஆசிரியர்தான். எனக்கும் கடமைகள் உண்டு. எனவே, எந்த RPT, DSKP, MODUL இல்லை என்று எனக்குத் தெரியப்படுத்தினால் அவற்றைப் பதிவேற்ற முயல்கிறேன். ஆசிரியர்கள் சிலர் புலனம் (whats app)) வழியாகவும் குறுந்தகவல் வழியாகவும் எனக்குத் தெரியப்படுத்தும் போது, இயன்றளவில் அவற்றைப் பதிவேற்றி விடுகிறேன். எனவே, ஒத்துழைப்பு கொடுங்கள். உங்கள் வேலைகளையும் தயவு செய்து என் மின்னஞ்சல் வழி அனுப்புங்கள். அனைவரும் ஒன்றுகூடி பணியாற்றுவோம். தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்குத் தோளோடு தோளாக நிற்போம். குறுகிய சிந்தனையில் எனக்கு மட்டும் இருந்தால் போதும், நான் செய்த ஒன்றை ஏன் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினால், அது மிகப் பெரிய தவறு.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி.

அன்புடன்,
முனியாண்டி ராஜ்.


No comments:

Post a Comment